சட்டத்துறை V/S காவல் துறை லடாய்! பரபரப்பு தகவல்கள்!

ம.பா.கெஜராஜ்,
கடலூர் மாவட்ட நீதித்துறையை வழிநடத்துவது சட்டமா?காவல்துறையா என்கிற தலைப்பிட்டு ஒரு செய்தி இறக்கைக்கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றன.
வணங்காமுடி என்கிற பெயரில் வெளியான அந்த கட்டுரையின் போக்கைப் பார்த்தால் சட்டத்தை காவல் துறை தங்கள் வசம் வைத்துக் கொண்டிருப்பதைப் போல் உணர முடிகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29.12.2021 ஆம் தேதியிட்ட புகார் கடிதம் ஒன்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடலூர் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் வாயிலாக அனுப்பிவைக்கப்பட்டது.
புகார்தாரர்களாக ஆறு இன்ஸ்பெக்டர்கள், கடலூர் மாவட்ட சிறப்பு சார்பு நீதிபதி மாண்புமிகு இருதயராணி அவர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
அதனடிப்படையில் கடந்த 08.01.2022 ஆம் தேதி கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
அந்த விசாரணைக்குப் பின்னர் சட்டத்துறையை மையப்படுத்தி, காவல் துறை சார்பாக நீண்ட ஒரு விமர்சன செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தான் வணங்காமுடி என்கிற பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வழக்கின் சாட்சி விசாரணை செய்ய தகுந்த அழைப்பாணை அனுப்பியும் சம்பந்தப்பட்ட சாட்சி ஆனவர் குறித்த நேரத்தில் நீதிமன்றம் ஆஜராகாத இருந்தால் அவர் மீது விட்நெஸ் வாரன்ட் பிறப்பித்து உத்தரவிடலாம் இது நீதிமன்ற அணுகுமுறை நடைமுறை.
ஆனால் மேற்படி சாட்சி ஆனவர் அரசு ஊழியர் எனில் காவல்துறை அதிகாரிகள் எனில் பலமுறை அவகாசம் வழங்கி, மேற்கண்ட சாட்சியினால் வழக்கின் விசாரணை காலதாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் மேற்கண்ட சாட்சிக்கு வாரண்ட் பிறப்பிப்பது இயல்பு.
அந்த நடைமுறையை தான் கடலூர் மாவட்ட சிறப்பு சார்பு நீதிபதி அவர்கள் காவல்துறை விசாரணை அதிகாரி ஒருவருக்கு வாரன்ட் பிறப்பித்து,நடைமுறைப்படுத்தினார்.
இந்த விபரம் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் தெரிந்ததே.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை நீக்க சட்டப் பிரிவின் கீழ் மனு செய்து சாட்சி கூறுவது தான் நடைமுறை.
ஆனால் அதைத் தவிர்த்து காவல்துறை அதிகாரி மீது வாரண்ட் பிறப்பிப்பது தவறு என்பதை காழ்ப்புணர்ச்சி காரணமாக மாறுதலாக அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசுவதை போன்றும், தேவையில்லாமல் நீதிமன்றத்தில் காக்க வைக்கிறார் என்றும் கூறுவது மிகுந்த வேதனைக்குரியது.
ஏனெனில் காவல்துறை பணி என்பது 24 மணி நேர பணியாகும், குற்ற வழக்குகளில் சாட்சி கூற வருவது போலவே தீர்ப்பாய வழக்கங்களையும் பாவிக்க வேண்டும்.
அதேபோன்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜரானால் வாதி, பிரதிவாதி வழக்கறிஞர்கள் பொறுத்துதான் சாட்சியை விசாரிக்க முடியும் இதனை காலம் தாழ்த்தி காக்க வைக்கிறார் என்று கருதுவது ஏற்புடையதல்ல,
இந்த அளவிற்கு காலத்தை குறித்தும் காக்க வைப்பது குறித்தும் வெளிப்படையாக கூறுகின்ற அதிகாரிகளுக்கு நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன் தங்களது காவல் நிலையத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும் குறித்த நேரத்தில் சரியான தீர்வு எட்டப்படுகிறதா? மரியாதைதான் வழங்கப்படுகிறதா.
(அறிமுகமானவர் என்றால் சரி) வழக்கறிஞர்கள் அமருவதற்கு ஒரு சேர் தான் வழங்கப்படுகிறதா? இதைப்பற்றி வழக்கறிஞர்கள் கேட்டாள் "பணி செய்ய விடாமல் தடுக்கிறார்" என்று வழக்கறிஞர் மேல் திணிப்பது, அப்படியானால் மாவட்ட சிறப்பு சார்பு நீதிபதி அவர்கள் செய்த சட்ட நடைமுறையை மீறிய செயலை நீதிமன்ற அவமதிப்பாக கருதலாமா?
ஒரு அதிகாரியின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இப்படித் திரித்து முன்னுக்குப்பின் புறம்பான ஒரு செய்தியை வெளியிடுவது தவறு.
உண்மையில் மேற்கண்ட சார்பு நீதிபதி அவர்கள் மிகவும் கடுமையான அதிகாரிதான், சட்டத்தின் பால் மட்டுமே.
நாங்கள் பார்த்தது வரை இன்று வரை அவர் அவருடைய வீட்டிலிருந்து சாதாரண மனிதராக நடந்துதான் நீதிமன்றத்துக்கு வருகிறார் சாமானிய மக்களையும் சாமானிய வழக்கறிஞர்களும் இளம் வழக்கறிஞர்களையும் மதித்து நடக்கக் கூடியவர், ஆனால் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்ட தவறமாட்டார், அவருடைய கண்டிப்பு நல்வழிப்படுத்த தான் அமையுமே தவிர வேறு ஏதும் உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.
தவறான கருத்துக்களை ஒருவருடைய சுயநலத்துக்காக நல்ல மனிதர் மீது சுமத்துவது நீதிக்கு உகந்தது அல்ல.
மோட்டார் வாகன தீர்ப்பாயத்திற்கு வாகன விபத்து வழக்குகளில் காவல்துறை அதிகாரிகளை குறிப்பாக புலனாய்வு செய்த அதிகாரிகள் சாட்சியாக அழைத்து விசாரித்து தீர்ப்பு சொல்ல சட்டத்தில் வழிவகை உள்ளது.
அந்த நீதிமன்றத்தின் சாட்சி சம்மன் ஏற்று நீதிமன்றம் வருகை தராத காவல் அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166(எ)வின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது காவல் ஆய்வாளர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு வருகை தர வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று சொல்வது சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகும்.
சம்மந்தப்பட்டவர்கள் சட்டப்படி நீதிமன்றத்திற்கு வந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 468 கீழ் வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தால் அல்லது வழக்கு விதி செய்திருந்தாலும் அவர்கள் நீதிமன்றம் வருகைதந்து சாட்சி சொல்வது அவசியமாகிறது.
கடலூர் மோட்டார் வாகன விபத்து நீதிமன்றம் குறித்த தகவலானது நீதிமன்றத்தின் மீதோ அல்லது ஒரு குறிப்பிட்ட நீதிபதி மீதோ இருக்கும் அதிருப்தி அல்லது கோபத்தை தான் காட்டுகிறதே தவிர சட்ட விதிமுறை மீறல் உள்ளதாக தெரியவில்லை.
நீதிபதிக்கு இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு? கடலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் என்று அந்த செய்தி முடிவடைகிறது.
வழக்கறிஞர்கள் ஏன் இந்த விளக்க செய்தியை வெளிட்டுள்ளார்கள் என்பதனை பார்க்க வேண்டுமானால் மீண்டும் சில நிமிடங்களை செலவிட்டு கீழ் கண்ட செய்திகளை வாசிக்கவும்.
நீதிபதி மீது இன்ஸ்பெக்டர்கள் புகார்: உயர் நீதிமன்றம் நடத்திய விசாரணை!
கடலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழங்கும் தீர்ப்பாய நீதிமன்றம் உள்ளது.
விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்து ஏற்படுத்தியவர்கள், வாகன உரிமையாளர்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தினர் என்று விபத்து தொடர்பான பலரும் சென்று வருவது வழக்கம்.
வழக்கு சம்பந்தமான டாக்குமென்ட் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அழைப்பாணை அனுப்பினால் தேவைப்படும் ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி ஆஜராகி சமர்ப்பிப்பார்.
இந்தத் தீர்ப்பாய நீதிமன்றத்துக்கு அண்மையில் பொறுபேற்றுள்ள நீதிபதி இருதயராணி மீதுதான் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட நீதிபதியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதைப்பற்றி காவல் துறை இன்ஸ்பெக்டர்கள் சிலர் தெரிவிக்கையில்,
"இந்த தீர்ப்பாயத்தில் இன்ஸ்பெக்டர்களுக்கு வேலை இல்லை. வழக்கு சம்பந்தமாக டாக்குமென்ட் தேவைப்பட்டால் சம்மன் அனுப்பி கேட்பார்கள். நாங்களும் சென்று கொடுப்போம். ஆனால், நீதிபதி இருதயராணி தேவை இல்லாமல் இன்ஸ்பெக்டர்களை அழைத்து நாள் முழுவதும் நிற்க வைக்கிறார். இதனால் எங்களது பல வேலைகள் கெடுகின்றன.
இதை விட சில இன்ஸ்பெக்டர்கள் இப்படி நிற்க வைப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
அண்மையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகனை சில டாக்குமென்டுகள் எடுத்துவந்து ஆஜராகச் சொல்லியுள்ளார். அவரும் வந்து ஆஜராகியிருக்கிறார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் ஒருநாள் முழுவதும் கோர்ட்டில் நிற்க வைத்திருக்கிறார் நீதிபதி இருதயராணி.
சுகர் பேஷன்ட்டான அசோகன் கடுமையான களைப்பால் தன்னையுமறியாமல் கீழே சரிந்துவிட்டார். ஆனால் அப்போதும் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் நீதிபதி இருதயராணி.
இன்னொரு நாள் திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா இந்தத் தீர்ப்பாயத்தில் ஆஜராகியிருக்கிறார். அப்போது அவரிடம், 'என்ன...கோர்ட் என்றால் மதிக்கமாட்டிங்களா, பயப்படமாட்டிங்களா?' என்று கேட்டவர் கவிதாவின் உடல் பருமனை குறித்து வார்த்தைகளால் துன்புறுத்தியுள்ளார்.
மேலும், 'உன்னை ரிமான்ட் பண்ணிடுவேன்' என்று மிரட்டி நிற்க வைத்து அனுப்பினார்.
வேறு ஒரு வழக்குக்காக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி இந்தத் தீர்ப்பாயத்துக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் செல்போனை காதில் வைத்தபடி வராண்டாவில் நடந்து சென்றார்.
அதைப் பார்த்த நீதிபதி இருதயராணி, அவரை கூப்பிடுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் இன்ஸ்பெக்டரிடம் சென்று தகவல் சொல்லியுள்ளனர். இன்ஸ்பெக்டர் வள்ளி சென்று என்னம்மா என கேட்க, அவரை ஒருமையில் பேசியதோடு, இன்ஸ்பெக்டரின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார் நீதிபதி இருதயராணி.
'கோர்ட்ல போன் பேசுறியா? அஞ்சாயிரம் ரூபாய் ஃபைனை கட்டிட்டு போனை எடுத்துட்டு போ' என்று சொல்லிவிட்டார்.
நெடுநேரம் வெளியே நின்ற இன்ஸ்பெக்டர் வள்ளி கண்கலங்கிக் கதறி தனது செல்போனை மீட்டுச் சென்றிருக்கிறார்.
இதேபோல வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணியை வாரன்ட் என்று தீர்ப்பாய நீதிமன்றத்துக்கு அழைத்திருக்கிறார் நீதிபதி.
வந்த அவரிடம், 'வாரன்ட் என்றால் என்னவென்று தெரியுமா? கிராஸ் பெல்ட் மற்றும் தொப்பியை கழற்றிவிட்டு கீழே உட்கார வேண்டும்' என்று உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி இருதயராணி.
குழம்பிப் போன இன்ஸ்பெக்டர் வீரமணி, 'அம்மா... எனக்கு வாரன்ட் வரல, வாரன்ட் போடவும் இல்லை. இருந்தால் காட்டுங்கள்' என்று கேட்டிருக்கிறார். உடனே கோபமான நீதிபதி இருதயராணி, 'என்னையே எதிர்த்துப் பேசுறியா? உன்னை ரிமான்ட் செய்கிறேன் பார் ' என்று கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியை அழைத்து, 'இவரை ரிமான்ட் பண்ணுங்கள்' என்று உத்தரவிட்டுள்ளார்.
அவர் நீதிபதியிடம், அம்மா பேசித் தீர்த்துக்கலாம்மா என்று சொல்லியுள்ளார். உடனே நீதிமன்ற ஊழியர்களிடம் இன்ஸ்பெக்டர் அவமதிப்பு செய்ததாக புகார் பெற்றுள்ளார்.
இவர்களைப் போல் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, காட்டுமன்னார்கோயில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் வெவ்வேறு விதமான கசப்புச் சம்பவங்கள் இந்தத் தீர்ப்பாய நீதிபதி இருதயராணியால் ஏற்பட்டுள்ளன.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இன்ஸ்பெக்டர்கள் ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் கடலூர் எஸ்பி சக்தி கணேசனிடம் குமுறல்களைக் கொட்டியுள்ளனர்.
இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.பி, தனக்குத் தெரிந்த மூத்த நீதிபதிகளிடம், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதிக்கு உள்ள அதிகாரங்களைப் பற்றி கேட்டுள்ளார்.
'யாரையும் கைது செய்ய உத்தரவிட அதிகாரம் இல்லை. ரூ 500க்கு மேல் அரசு ஊழியர்களிடம் அபராதம் விதிக்க முடியாது. அப்படியே அபராதம் விதித்தாலும் அதை சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்துதான் பிடித்தம் செய்ய முடியும்' என்பதை அறிந்துகொண்டார் எஸ்பி.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்களிடம் புகார்களைப் பெற்று அவற்றை உயர் நீதிமன்ற ரிஜிஸ்ட்ரார் தனபாலுக்கு ஒரு டிஎஸ்பி மூலமாக கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
நீதித்துறை உள் விவகாரங்களை விசாரிக்கும் போர்ட்போலியோ நீதிபதியையும் தொடர்பு கொண்டு விரிவான தகவல்களை தெரியப்படுத்திவிட்டார் கடலூர் எஸ்பி சக்தி கணேசன்.
போலீஸ் அதிகாரிகள் கொடுத்த புகாரில் இருந்த தீவிரத்தைப் புரிந்துகொண்ட உயர் நீதிமன்றம் அந்தப் புகார்கள் பற்றி விசாரித்து அறிக்கை தருமாறு கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவஹருக்கு 29.12.2021இல் கடிதம் அனுப்பியுள்ளது.
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆறு இன்ஸ்பெக்டர்களும் ஜனவரி 8ஆம் தேதி தன் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடலூர் எஸ்பி சக்தி கணேசனுக்கு தபால் அனுப்பியுள்ளார் முதன்மை நீதிபதி.
அதன் அடிப்படையில் ஜனவரி 8ஆம் தேதி நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகன், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா போன்றவர்கள் நீதிபதி ஜவஹர் முன்னிலையில் ஆஜராகி தங்களுக்குத் தீர்ப்பாய நீதிபதி இருதயராணி செய்த கொடுமையைச் சொல்லி அழுதுள்ளார்கள்.
ஒவ்வொருவரிடமும் சுமார் 60 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரையில் பொறுமையாக விசாரித்து வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளார் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவஹர்.
இந்த விசாரணை அறிக்கைக்கு பிறகு தீர்ப்பாய நீதிபதி இருதயராணி மீது நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.
இன்ஸ்பெக்டர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையைப் பற்றி அறிந்ததும் இதுபற்றி விசாரித்து, சென்னை உயர் நீதிமன்றம் வரை புகார் அளித்து விசாரணைக்கு வழி வகுத்திருக்கும் கடலூர் எஸ்பி சக்தி கணேசனுக்கு போலீஸார் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி சட்டத்துறையும் காவல் துறையும் நேரடியாக மோதிக்கொண்டிருக்கிற நிலையில் அடுத்தக்கட்டமாக யார் கை ஓங்கப்போகிறது என்பது தான் அனைவரின் எதிர்பாப்பாக உள்ளது.
இதுகுறித்து முன்னாள் நீதிபதி ஒருவர் தெரிவிக்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமமே, அந்த வகையில் சட்ட நடவடிக்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கக்கூடிய நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் இந்த விஷயத்தில் செயல்பட்டு இருப்பதாகவே கருதப்படுகிறது இருப்பினும் விசாரணை அறிக்கை வெளியாவதற்கு முன்பு கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்றார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை நிர்வாகம் இதை இவ்வளவு பெரிதாக்கி இருக்க வேண்டாம் என்று நான் கருதுகிறேன், நீதிபதி மீது புகார் அளிக்க காட்டிய வேகத்தை தம் கீழ் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் உரிய வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தால் பிரச்சனை ஏற்படாமல் இருந்திருக்கும் என்கிறார் சுருக்கமாக.